புதன், 1 அக்டோபர், 2014

நிகழ்வில் பரிசு பெற்ற கவிதைகள்! (28.9.2014)

விழுதுகள்!

யானை ஆயிரம் கட்டி
அருகே பரி
பத்தாயிரம் கட்டி
பல்லாயிரம் வீரர்
படுத்துறங்கி
பாதியிடம் மீதமுள்ள
ஆலமர விழுது
நாங்கள் வாழும் வீடு!

காளையரைச் சுண்டி இழுக்கும்
கன்னியரின் ஒற்றை சடை…
பிள்ளைகளைத் தாலாட்டும்
நல்லதொரு ஊஞ்சல்…
வாலா வயது
ஆலம் விழுது!

ஆணிவேரை
இழந்து நிற்கும்
பெற்றோரைத்
தாங்கி நிற்கும்
பிள்ளைகள் நாங்கள்…

பொன். கர்ணன்.







விழுதுகள்!

அறிவியலுக்கும் அடங்காத வியப்பு
விழுதின் மரபு
விதையிலா? விருட்சத்திலா?
வேரில் வளர்ந்த மரத்தை
விழாமல் தாங்கும் விழுதுகள் நிலத்தே!

விழுதுகள் ஆலில் மட்டுமா?
ஆட்களிலும் மழலையாய்த்
தந்தவர்களைத் தாங்கி நிற்கிறது
தலையில் கனத்துடன் தரையில்…

வேர்கள் நீரைத் தொடாததால்
விழுதுகள் பூமியைத் தொடப்போராடுகின்றன
மனிதர்களில் மாற்றமின்றித்
தங்களைச் சுமந்தவர்களுக்காக
செங்கல்லைச் சுமக்கின்றன விழுதுகள்

ஆற்றின் நடுவே ஆலமரம்
விண்ணை நோக்கி
விரல் நீட்டுகிறது
தண்ணீருக்காக விழுதுகள்…

அடையாரு ஆலமரம் அகிலம் போற்றுமே
அதன் விழுதுகள் யாவும் அடிமரம் காட்டுமே
மனித விழுதுகள் தனிக்குடி ஓட்டுமே
மீளாத துன்பமெனில் பொதுக்குடி ஒட்டுமே

மனித மரங்கள் மதுவில் தள்ளாடுகிறது
வேர் விழப்போவது தெரியாமலும்
தன் தாயுடன் தாம் அழப்போவது புரியாமலும்
விழுதுகள் வீதியில் சில்லாடுகிறது…

விரைவில் ஒரு விதி செய்வோம்
விழுதுகள் வாழ நல் வழிசெய்வோம்!


கவிஞர். சின்தன. பாலுசாமி