வியாழன், 31 ஜூலை, 2014
புதன், 30 ஜூலை, 2014
‘விதைநெல்’- நூல் திறனாய்வு! – (27.07.2014)
‘விதைநெல்’- நூல் திறனாய்வு!
–கவிஞர் தி. வரதராஜ பெருமாள்.
சூரியனின் வருகைக்கு விட்டில் பூச்சியின் வரவேற்பா?
களிறுகளின் அணிவகுப்பில் கட்டெரும்பின் கட்டளையா? நான் விட்டில் பூச்சியா? இல்லை கட்டெரும்பா?
என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் கண்களுக்கு பூமாலை மணிவண்ணன் ஐயா அவர்கள் எழுத்தில்
ஒளிசேர் கதிராக… நடையில், கருத்தில் பலம்சேர் களிறாகத் தோன்றுகிறார் என்று சொன்னால்
அது மிகையாகாது.
முத்தமிழ் பூவுலகில் மூன்றாம் தமிழ் வளர்க்கும்
நற்றமிழ் காக்கும் உமக்கா!!! இக் கல்லா ஒருவனின் ஆய்வுரை?!!
சிறுபிள்ளை இட்ட வெள்ளாமை
வீடுவந்து சேராது என்பார்கள். அதுபோல் மணிவண்ணன் ஐயா அவர்களின் ‘விதைநெல்’ நூலை ஆய்வுரைக்கு
என்னிடம் கொடுத்திருப்பது எனக்குப் பெருமையானாலும் அவருக்குச் செறுமை என்றே என் இதயம்
மொழிகிறது.
மொழிந்த இதயத்தையும் அழைத்துக்கொண்டே கடந்து
சென்றேன் ‘விதைநெல்’லை, கடந்த உடன் நான் தெரிந்து கொண்டேன் நூலைக் கடந்தது நானல்ல…
நூல்தான் என்னைக் கடந்தது என்று…
சதை ஆண்ட என் உடலைக் கடக்கும் பொழுதுகளில் அவரின்
கதையாண்ட அனுபவத்தைச் சொன்னால் ஆராது. சொன்னால் தீராது.
நாவல், சிறுகதை, இவைகளை நான் படிக்கத் தொடங்கும்
முன் கதையின் கரு மனதின் எதிர்பார்ப்பாக இருக்கும். படித்து முடித்தவுடன் ஓரிரு வரிகளில்
அந்தக் கதையைச் சொல்லிவரும் அளவிற்கு என் எண்ணத்தோடு சேர்ந்து என் இதயமும் சுருங்கிவிடும்.
ஆனால் ‘விதைநெல்’லை நான் கடந்து வந்த ஒவ்வொரு
மணித்துளிகளிலும் மனித மனதில் ஏற்படும் மனதால் ஏற்படும் ஒவ்வொன்றையும் ஒன்றன்பின் ஒன்றாய்
அனுபவித்துக் கொண்டே கடந்து வந்தேன்.
காரணம் ஆற்றைக் கடக்கும் பொழுது காலில் மோதியது
மீனா இல்லை அரவா என்று எண்ணும் மனம் நம்மைக் கடக்க விடாமல் சற்றே நின்று நம்மை யோசிக்கத்
தூண்டும். அதுபோல் ‘விதைநெல்’லை நான் கடக்கும் போது என் இதயத்தில் மோதிய ஒவ்வொன்றும்
விதைக்கப்பட்ட நெல் மணிகளாய் ஆங்காங்கே இதயத்தில் முளைவிட்டுக் கிடக்கிறது. பிடுங்கி
எறிய மனமில்லை. காரணம் விதைநெல்லாயிற்றே… பிடுங்கி எறிந்துவிட்டால் உணவுக்கு நான் என்ன
செய்வது? என்றுதான் ஆம் முத்தமிழ்ச் சுவைகளில் மூன்றாம் தமிழ்ச் சுவைக்குக் காத்திருக்கும்
என் மனதிற்குச் சரியான உணவு இந்த ‘விதைநெல்’.
ஒரு புத்தகத்தைப் படிக்கும் பொழுது எந்த ஒரு
மனமும் நிலையாக இருப்பதற்கும் நிலையற்றிருப்பதற்கும் எழுத்தோட்டமே காரணம் என்பது எல்லோருக்கும்
தெரியும்.
ஆனால் பூமாலை மணிவண்ணன் அவர்களின் மூன்றாம் தமிழ்
நூலாம் ‘விதைநெல்’ அவைகளில் இருந்து சற்றே மாறுபட்டு நிற்கிறது.
அவர் நூலை நான் வாசிக்கும்
நேரம் நீண்டு கொண்டே இருந்தது. அதற்குக் காரணம் விதைநெல்லைப் பசியோடு வாசித்துக் கொண்டே
நான் கடந்து சென்ற பாதை யெல்லாம் நற்றமிழ் பசிக்கு விருந்தாக அமைந்த அவரின் வரிகளை
நான் புசித்துக் கொண்டே சென்றதுதான்.
தலைப்புக்கே உரிய நாடகக் கதை, கதைக்கே உரிய கதாபாத்ததிரங்கள்,
கதாபாத்திரங்களுக்கென்றே அமைக்கப்பட்ட பெயர், பெயருக்கே உரிய கதாபாத்திரத்தின் குணங்கள்,
குணத்திற்கே உரிய வசனங்கள்…
இப்படி அவரின் எழுத்தோட்டத்தில் இடம் பிடித்த
ஒவ்வொன்றும் தனக்கே ஒரு தனி இடம் பிடித்து நூலிலும் நூலைப் படிக்கின்ற மனங்களிலும்
கம்பீரமாக உலாவந்து கொண்டிருப்பது தமிழின் விந்தையா? அல்லது தமிழை முறையாக பாவித்த
அவரின் கைவண்ணமா? என்ற கேள்வி ஒவ்வொரு வரியைப் படிக்கும் போதும் அடுக்கடுக்காய் என்
இதயத்தில் உயர்ந்து நிற்கிறது.
பெரும் பாலும் சாதாரன உலக நுகர்ச்சிகளிலேயே தாவிச் செல்லும் மனித மனத்தை, தன்பால்
கவர்ச்சித்துக் கொள்பவன்தான் உண்மையான எழுத்தாளன். அப்படி ஒரு அசாத்தியத் திறமை ஐயா
அவர்களுக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.
சமூக மேடை நாடகங்களை நூலாக மாற்றுவது இயல்பான
ஒன்றுதான். ஆனால் நூலைப் படிக்கும் பொழுது காட்சிகளைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும்
மொழி ஆளுமையும் சொல்லாளுமையும் பயிற்சியால் வருவதல்ல என்பது திண்ணம்.
சமுதாய வளர்ச்சியில் மனிதன் தன்னை உயர்த்திக் கொள்வதற்கு முடிவெடுப்பதும் யுக்திகளைக்
கையாள்வதும் இயல்பானதே. ஆனால் எந்த ஒரு முடிவினை எடுப்பதற்கும் அவனுக்கு வயதோடு கூடிய
அனுபவமும் கணக்கிடும் மனப்பான்மையும் தேவை என்பதுதான் உண்மை.
முதலாம் நாடகக்கதையான விதை நெல்லில் அக்கருத்தை
நேர்த்தியாகவும் மென்மையாகவும் குழந்தைக்கு நிலாச்சோறு கொடுப்பதைப்போல் ஊட்டி இருப்பது
படிக்கும் மனதை அவர்பால் இழுக்கும் காந்தக் கரு.
அன்பு, பாசம், அரவணைப்பு, இந்த வார்த்தைகளுக்கெல்லாம்
பொருத்தமான வார்த்தை எதுவெனக் கேட்டால் தாய் என்றுதான் கூறுவேன்.
அப்படி ஒரு தாய் தன் மகனையும் மருமகளையும் விட்டுவிட்டு
முதியோர் இல்லத்தில் வாழ்த்துகொண்டு இருக்கும் பொழுது அவளின் மனோநிலை எப்படி இருக்கும்
என்பது எல்லோரும் அறிந்ததே.
ஆனால் பூமாலை மணிவண்ணன் ஐயா அவர்கள் உருவாக்கிய கமலா என்கிற தாய் கதாபாத்திரம்
முதியோர் இல்லத்தில் வாழ்த்துகொண்டு இருக்கும் போது தனது பார்வையை பெற்ற பிள்ளைகள்
மீது செலுத்தாமல் சமுதாயத்தின் மீது செலுத்துவது என்னை மட்டுமல்ல படிக்கும் ஒவ்வொரு
மனதையும் மெய் சோரவைக்கும் மின்சாரம் என்பது உண்மை.
இந்த நாடகத்தின் முதலாவது காட்சியை நான் படிக்கும்
போது, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது அதனால்தான் இப்படி பேசிக்கொள்கிறார்கள். என்று
படிக்கும் கண்களை அடுத்த வரிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி யோசிக்க வைக்கும்படி
மிகத் துல்லியமாகவும் நிதானமாகவும் தமக்கே உரிய எழுத்தோட்டத்தில் கொடுத்திருப்பது கப்பலைமட்டுமல்ல
கடல் கொந்தளிப்பையும் சேர்த்து நிறுத்தும் நங்கூரம் என்றுதான் கூறவேண்டும்.
அது மட்டுமல்லாது சமூக வழக்கில் அவர் எழுதி இருக்கும்
ஒவ்வொரு வசனங்களும் அதை பேசும் கதாபாத்திரத்தின் வெளித்தோற்றத்தைக் கூட மிகத் துல்லியமாக
ஆழ் மனதில் படம் பிடித்துக் காட்டுவது அவர் மொழியைக் கையாண்ட விதத்தைப் பிரதிபலிக்கிறது.
சுயநலத்தை மட்டுமே இலக்கென்று எண்ணி உலாவும்
மனிதமனத்தில் ஏதோ ஒருசிலர் பார்வை மட்டுமே சமூக நோக்கில் விழும், அதில் யாரோ ஒருவர்
மட்டும் வெற்றியைக் கண்பார்கள்.
அவ்வாறு வெற்றியின் காண்பவர்களுக்கு ஏற்படும்
சமுதாய சிக்கல்கள், மன உளைச்சல்கள், பொருளாதார சிக்கல்கள்… நச்சினார்க்கினியன் என்ற
கதாபாத்திரம் மூலம் விளக்கியிருப்பது இரும்பைக் கரைக்கும் எழுத்தோட்டம் என்றுதான் கூற
வேண்டும்.
காதலனும் காதலியும் தொலை பேசியில் உரையாடிக்
கொண்டிருக்கும் போது இருவரில் ஒருவர் குரலை உயர்த்திப் பேசினாலோ, தாழ்த்திப் பேசினாலோ
அல்லது உச்சரிப்பில் ஏதேனும் மாறுதல் தெரிந்தாலோ அவர்களின் மனோ நிலையை நாம் கணக்கிட
முடியும். ஏன் என்றால் அதுதான் காதல்.
விதை நெல்லில் இருக்கும் சிறுசிறு தொலைபேசி உரையாடல்களைப்
படிக்கும் போது அதைப் பேசும் கதாபாத்திரத்தின் மனோநிலையைக் கூட கண்முன்னே நிறுத்தும்
கற்பனைத் திறன் காற்றில் வரைந்த ஓவியம் என்றுதான் கூறவேண்டும்.
எந்த ஒரு நூலும் மனிதச் சார்புடையது என்பதில்
மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஏதோ படித்தோம் பக்கங்களைப் புரட்டினோம் என்று எண்ணும்படி
எண்ணங்களை ஆக்கும் நூல்களே பெருவாரியான நூல்கள். மேலும் கருத்துச் செறிவுடைய நூல்களை
ஏறக்குறைய மனிதனும் விரும்புவதில்லை.
ஆனால் விதைநெல்லில் ஒரு பக்கத்தைப் படித்து விட்டு
அடுத்த பக்கத்தைப் புரட்டுவதற்கு முன் அவரின் விவேகமான எழுத்தோட்டம் மனதைப் படிக்க
ஆரம்பித்து விடுகிறது. பக்கங்களோடு சேர்ந்து துக்கங்களும் புரண்டு விடுகிறது. நூலைப்
படித்து முடித்து வெளியே வரும் மனம் ஓர் அருவியில் குளித்ததுபோல் அழுக்கற்று வெளியே
வருகிறது.
மொத்தத்தில்…
இதயத்தில் விதைத்த
இந்த விதைநெல்லில்
களைகளைப் பிடுங்கத்
தேவையில்லை –ஆம்
களைகளை அழிப்பதற்கே
விதைக்கப்பட்ட நெல்தான்
இந்த
விதைநெல்…
நன்றி
தி. வரதராஜ பெருமாள்
செவ்வாய், 29 ஜூலை, 2014
பரிசு பெற்ற கவிதைகள்! (27.07.2014)
முதல் பரிசு பெற்ற கவிஞர் சக்திவேலின் கவிதை...
புதியதோர் உலகம் செய்வோம்! கவிஞர் சக்திவேல்
எத்தனை ஆண்டுகள் கழிந்தன நாம்
முக்கிய வழிகளில் சென்றதில் –நம்மை
சொக்கிய வழிகள் சிலவாயின் நாம்
சிக்கிய வழிகள் பலவாகும் –அதில்
முக்கிய காரண மெதுவாயின் –அது
குறுகிய வேற்றுமை மதமு மொன்றாகும்!
உருகிய நிலையில் உறவுகள் நிற்க
மருகிய நிலைக்குச் செல்லாத மதங்கள் –எனவே
புதியதோர் பூவுலகுக்கு அங்கே
ஒற்றுமை ஒன்றையே வளர்த்திடுவோம்!
ஓலைச் சுவடிகள் ஒவ்வொன்றாய் நிறைந்தன
உன் வெற்றி சங்கென்றாய் –தமிழா!
ஓடும் ஒவ்வொரு தருனமெல்லாம் ஓரமாய்
நீயும் ஓய்ந்து நின்றாய்! –அதனால்
தோலில் ஏறிய தோல்வியெல்லாம் –உன்னில்
வேதனை வேல்வி வளர்க்கின்றன –அதில்
சாதனை ஆசை சருகொன்றாய் நீயும்
தணலில் வீழ்ந்து எரிகின்றாய் –எனவே
புதியதோர் உலகம் செய்வோம் –அங்கே
உறக்கம் தவிர்த்து சாதனை சரிதம் படைப்போம்.
கவிஞர் சக்திவேல்.
----
இரண்டாம் பரிசு பெற்ற கவிஞர் விஸ்வபாரதி அவர்களின் கவிதை...
திங்கள், 28 ஜூலை, 2014
27/07/2014 அன்றைய நிகழ்வுக்கான புகைப்படங்கள்!
நிகழ்வு தொடங்குவதற்கு முன் சிற்றுரை ஆற்றுகிறார் புலவர் அய்யா. மோகன் அவர்கள்...
நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறார் தூவல் இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...
பார்வையாளர்கள்...
இன்றைய நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார் பாவலர், சித்த மருத்துவர் வரதராஜன் அவர்கள்...
எழுத்தாளர் பூமலை மணிவண்ணன் அவர்களின் 'விதைநெல்' என்ற சிறுகதை நூலைத் திரனாய்வு செய்து வழங்குகிறார் கவிஞர் தி. வரதராஜபெருமாள்...
நிகழ்ச்சி தொகுப்பாளர் பெரங்கியம் சித்தமருத்துவர் வரதராஜன் அவர்களும் பார்வையாளர்களும்...
தனது நூல் தரனாய்வு செய்யப்படுவதைக் கண்ணுறும் எழுத்தாளர் பூமலை மணிவண்ணன் அவர்களும் பார்வையாளர்களும்...
இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினர் முகவை. இராம்குமார் அவர்கள்...
இம்மாத போட்டித் தலைப்பான 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற தலைப்புக்கவிதையை வாசிக்கிறார் கவிஞர் வரதராஜபெருமாள்...
நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரதராஜன் அவர்கள்...
நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...
போட்டித் தலைப்புக்குத் தனது கவிதையை வாசிக்கும் கவிஞர் பாலுசாமி அவர்கள்...
போட்டித்தலைப்பில் தனது கவிதையை வாசிக்கிறார் கவிஞர் காசி வினோதன்...
தனது கவிதையை வாசிக்கும் கவிஞர் சக்திவேல்...
கவிஞர் விஸ்வநாதன்...
கவிஞர் அண்ணாதுரை...
பார்வையாளர்கள்...
போட்டிக்கவிதையை வாசிக்கும் கவிஞர் சிந்தனைச் செல்வி...
போட்டிக்கவிதையை வாசிக்கிறார் கவிஞர் பொன். கர்ணன்...
சிறப்பு விருந்தினர் முகவை. இராம்குமார் அவர்கள் பேசத்தொடங்கும் முன் அவர்களைப் பற்றி தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...
பார்வையாளர்கள்...
பார்வையாளர்கள்...
'மரபை உடைக்கலாம் வா' என்ற தலைப்பில் தனது சிறப்புரையை முன்வைக்கும் சிறப்பு விருந்தினர் முகவை. இராம் குமார் அவர்கள்...
சிறப்பு விருந்தினர் முகவை இராம்குமார் அவர்கள்...
இன்றைய போட்டித் தலைப்புக்கான கவிதை எழுதிப் பரிசு பெரும் கவிஞர் சக்திவேல்...
இன்றைய போட்டித் தலைப்புக்கான கவிதை எழுதிப் பரிசு பெரும் கவிஞர் விஸ்வநாதன்...
சிறப்பு விருந்தினர் முகவை இராம் அவர்கள்...
இன்றைய சிறப்பு விருந்தினர் முகவை இராம் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் புலவர் அய்யா மோகன் அவர்கள்... உடன் தொகுப்பாளர் பாவலர் வரதராஜன் (வலம்) ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் (இடம்)
சிறப்பு விருந்தினரின் சிறப்பான பேச்சினை சிலாகிக்கும் புலவர் அய்யா மோகன் அவர்கள்...
தான் திரனாய்ந்த ஆய்வுக்கட்டுரையை 'விதைநெல் நூலாசிரியர் பூமலை மணிவண்ணன் அவர்களிடம் சமர்ப்பிக்கிறார் கவிஞர் வரதராஜபெருமாள்...
1.8.2014 வெள்ளிக்கிழமை அன்று திட்டக்குடி பெரிய கோவிலில் நடைபெறவிருக்கும், 'தூவல் இலக்கிய வட்டத்தின்' சிறப்புச் சொற்பொழிவுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் சிவனடியார் ராஜசேகர் அவர்களை அறிமுகப் படுத்துகிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரதராஜன் அவர்கள். உடன் அகரம் அமுதன்...
சிறப்பு விருந்தினருடன் பரிசுபெற்ற கவிஞர்கள்...
நிறைவுரையாற்றுகிறார் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...
ஞாயிறு, 13 ஜூலை, 2014
சிறப்புச் சொற்பொழிவுப் புகைப்படங்கள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)